சென்னை: கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் துறை தடை விதிததுள்ளது. சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளான சோழிங்கநல்லுார், பெருங்குடி மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுடன் 340 கி.மீ., துாரத்துக்கு 1,243 கோடி மதிப்பில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகிறது. இதில், கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை 52 கி.மீ., துாரத்திற்கு 376 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.