சிபிஎஸ்இ பொதுத் தேர்வுத் தேதிகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு: மத்திய கல்வி அமைச்சர் தகவல்

டெல்லி: சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கும் தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க உள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிரிவில் 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்றுக்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் அக்டோபர் 15-ம் தேதிக்குப்பின் சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.

இதனால் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, பாடத் திட்டத்தில் 30 சதவீதம் வரை குறைத்து, பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ தகவல் அளித்தது. மேலும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களிடம் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்துக்களைக் கேட்டறிந்தார். கடந்த 22-ம் தேதி ஆசிரியர்களுடனும் அமைச்சர் பொக்ரியால் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அமைச்சர் பொக்ரியால் கூறியதாவது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு எழுத்து முறையிலேயே நடத்தப்படும். ஆன்லைன் மூலம் நடத்தப்படுவது சாத்தியமாகாது மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியப்படாது. 30 சதவீதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் எனக் கூறினார்.

இந்தநிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கும் தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க  உள்ளார். இதனை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்த கருத்துக்களைப் பரிசீலனை செய்து அதன் படி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 2021 பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று முன்னதாகவே அமைச்சர் பொக்ரியால் அறிவித்திருந்தார்.

Related Stories: