பெங்களூரு: சீனா நிறுவன செல்போன் செயலிகள் வாயிலாக மக்களிடம் டிஜிட்டல் வழிமுறையில் கடன் வழங்குவதாக கூறி, அதிகளவு வட்டி வசூலித்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை சி.சி.பி போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் செல்போன் செயலி வாயிலாக டிஜிட்டல் கடன் என்ற பெயரில் மக்களிடம் பணம் கொடுத்து, அதை செலுத்த தவறுபவர்களை மிரட்டி, பணம் வசூலிப்பதாக சி.சி.பி போலீசாருக்கு புகார் வந்து கொண்டிருந்தது. அதன்படி நேற்று இது தொடர்பாக 3 பேரை சி.சி.பி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் ஹொசகுட்டதஹள்ளி சாமண்ணா கார்டன் பகுதியை சேர்ந்த சையது அகமது (33), பி.டி.எம் லே அவுட் 2வது ஸ்டேஜை சேர்ந்த சையது இர்பான் (26), ராமகொண்டனஹள்ளியை சேர்ந்த ஆதித்யா சேனாபதி (25) என்று தெரியவந்தது.