கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சியில்70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊரப்பாக்கம் ஊராட்சி உட்பட 5 கிமீ தொலைவில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில், 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா கிராம சேவைமைய கட்டிட வளாகத்தில் நேற்று நடந்தது. அதிமுக ஒன்றிய பொருளாளர் கபில் (எ) கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கருணாகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலா சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா கலந்து கொண்டு, 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். இதில், கிளை செயலாளர்கள் ராமச்சந்திரன், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.