புத்தாண்டு பரிசாக நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு பென்ஷன், வீடு வழங்க உத்தரப் பிரதேச அரசு முடிவு..!

லக்னோ : புத்தாண்டு பரிசாக 17 திட்டங்களின் நன்மைகளை எம்ஜிஎன்ஆர்இஜிஏ எனப்படும் நூறு நாள் வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் துறையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் ஓய்வூதியம், மருத்துவ வசதி மற்றும் வீட்டு உதவி போன்ற சலுகைகளைப் பெறுவார்கள்.இதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள்  நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 20 லட்சம் தொழிலாளர்களை தொழிலாளர் துறையுடன் பதிவு செய்ய ஊரக வளர்ச்சித் துறை இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்திற்கான கூடுதல் ஆணையர் யோகேஷ் குமார் கூறுகையில், இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1.4 கோடி பேர் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றியுள்ளனர்.  விரைவில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களை பதிவு செய்து, அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலமாக உத்தரபிரதேசம் உருவாகும். நூறு நாள் வேலை  திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட முயற்சி இப்போது பலனைத் தருகிறது, என்றார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) ஒரு சமூக பாதுகாப்பு நடவடிக்கையாகும், இது ‘வேலை செய்யும் உரிமைக்கு’ உத்தரவாதம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சட்டம் 2005 செப்டம்பரில் யுபிஏ அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை தேடுவோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஒரு PTI அறிக்கை கூறுகிறது

Related Stories: