எங்கள் உரிமைகளை பறிப்பது மிகப்பெரிய பாவம்... பிரதமருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாயிகள்

புதுடெல்லி, :டெல்லியின் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்களது ரத்தத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் இன்றுடன் 27வது நாளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு தங்களது ரத்தத்தால் விவசாயிகள் சிலர் கடிதம் எழுதி உள்ளனர். அதில், ‘விவசாயிகளின் நில உரிமையைப் பறித்து அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கக்கூடிய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். இது எங்களுடைய ரத்தம். எங்கள் உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்குவது மிகப்பெரிய பாவம்.

விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் பிரதமராகிய நீங்கள் பாவம் செய்கிறீர்கள். ஒருவருடைய உரிமையை மற்றவர் பறிக்கக்கூடாது என்று குருநானக் கூறியிருக்கிறார். குருத்வாராவில் போய் பிரார்த்தனை நடத்திய உங்களுக்கு அது ஏன் தெரியாமல் போய்விட்டது..?’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே இன்று இரண்டாம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மத்திய அரசின் சார்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளனர். இதுவரை நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தை விபரங்களையே, அந்த கடிதத்தில் அரசு தெரிவித்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர். எனவே, இன்று விவசாய அமைப்புகள் மீண்டும் ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு பதில் கடிதம் அனுப்ப விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இதனிடையே, சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 65 வயதான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிஷன் சிங் என்பவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்துள்ள அவரைக் கவனித்த மற்ற விவசாயிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்தி விட்டு உடல்நலக்குறைவு, விபத்து, தற்கொலை போன்ற காரணங்களால் 34 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: