அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி தூய்மை பணியாளர்கள் வசிக்கும் காலனியில் அடிப்படை வசதிகள் குறைபட்டால் இங்குள்ளோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அருப்புக்கோட்டை சுக்கில்நத்தம் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தூய்மை பணியாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகள் கட்டி பல வருடங்களாகி விட்டன. முறையான பராமரிப்பு இல்லாததால் ஒரு சில வீடுகளில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்கள் பெயர்ந்து விட்டது. அறைகளில் பொருத்தப்பட்ட ஜன்னல்களில் உள்ள கண்ணாடி உடைந்து விட்டது. வீடுகளில் உள்ள கழிப்பறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாய்கள் உடைந்து கிடக்கின்றன. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. காலனியில் பொதுகுடிநீர் குழாய் உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரோடு போடும் பணியின் போது இந்த குழாயை சேதப்படுத்தி விட்டனர்.
அதன் காரணமாக குழாயில் தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக நகராட்சி சார்பில் லாரி மூலம் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த குடிநீரும் உவர்ப்புத்தன்மையாக உள்ளதால் குடிக்க முடியவில்லை.