தேவையில்லாமல் விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும்..! கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை: தேவையில்லாமல் அதிகமாக விடுமுறை எடுத்துள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை அனுப்ப கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கொரோனோ தொற்று மற்றும் உடல் நலன் சார்ந்த காரணங்களைத் தவிர அதிகமாக விடுமுறை எடுத்து நிர்வாகப் பணிகளை ஒழுங்காக மேற்கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டுமென கல்லூரி கல்வி இயக்குநர் ராமலட்சுமி அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தேவையற்ற காரணங்களுக்காக அதிகமாக விடுமுறை எடுத்துள்ளவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் பலர் உடல்நலன் சார்ந்த காரணங்களைத் தவிர்த்து பலர் தேவையில்லாமல் விடுமுறை எடுப்பதன் காரணமாக அரசுக் கல்லூரிகளில் கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து கல்லூரிக் கல்வித் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கொரோனோ காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேல் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 7ம் தேதி முதல் நேரடியாக மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பல பேராசிரியர்கள் கல்லூரிகள் திறக்கப்பட பிறகும் விடுமுறையில் இருந்து வருவது கல்லூரி கல்வி இயக்ககத்தின் கவனத்திற்கு வந்தது.

 இதனால் சிறப்பு விடுமுறை தவிர்த்து தேவையில்லாமல் விடுமுறை எடுத்துள்ள பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்ட பின்னர், அதிக விடுமுறை எடுப்பதற்கான விளக்கம் கேட்கப்படும். உரிய விளக்கம் அளிக்காத பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கல்லூரி கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்டியல் தயாரிக்கும் பணியை அரசுக் கல்லூரி முதல்வர்கள் துவக்கியுள்ளதால் விரைவில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவையற்ற விடுமுறை எடுத்துள்ள நாட்களுக்கான ஊதியத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: