சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மார்க்கெட் இழந்த நடிகைகளை பிரசாரத்துக்கு இழுக்க முயற்சி: அதிமுக தலைவர்கள் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக பிரசாரத்துக்கு நடிகர், நடிகைகளுக்கு முன்னணி தலைவர்கள் வலை விரித்துள்ளனர். தமிழகத்தில் 2021ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தயாராகி வருகிறது. தேர்தல் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 14ம் தேதி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடைபெற்றது.

இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், குறிப்பாக சட்டமன்ற அதிமுக தேர்தல் பிரசாரத்துக்கு நடிகர், நடிகைகளை களம் இறக்கிவிடவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் சினிமாவில் இருந்ததால், அவர்களுக்கு ஆதரவாக அதிகளவில் நடிகர், நடிகைகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிமுக கட்சி மீது பெரிய அளவில் கொள்கை பிடிப்பு இல்லாவிட்டாலும், கட்சி தலைவர்கள் சினிமாவில் இருந்ததால் நடிகர், நடிகைகள் தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். அதேநேரம், திராவிட கொள்கையில் பிடிப்பு உள்ளவர்கள் திமுக கட்சிக்கு ஆதரவாகவும் பல முக்கிய நடிகர், நடிகைகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தற்போது எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் யாரும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அதிமுக கட்சியை வழிநடத்தி வருகின்றனர். ஆனாலும், அரசின் திட்டங்கள் பெரிய அளவில் பொதுமக்களுக்கு சென்று சேர்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் அதிமுக நிர்வாகிகளிடம்் உள்ளது. இதற்கு  அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும், எம்பி, எம்எல்ஏக்களும் நல்ல வருமானம் பார்க்கிறார்கள். பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர் என 2ம், 3ம் கட்ட தலைவர்களின் எந்த கோரிக்கையையும் அமைச்சர்கள் கண்டு கொள்வதே இல்லை.

கட்சியை வளர்க்க நிதி உதவியும் அளிப்பது இல்லை.இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வருவதால், பிரசாரத்துக்கு கூட ஆள் இல்லாத நிலை அதிமுகவில் உள்ளது. அதனால், அதிமுக சார்பில் பிரசாரத்துக்கு சில நடிகர், நடிகைகள் விலை கொடுத்து இழுக்க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் முயன்று வருகிறார்கள். அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தால் பல லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசப்படுகிறது.

இதனால் சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் பிரசாரத்துக்கு செல்லவும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால், எந்த கொள்கையும் இல்லாமல் திடீரென அதிமுக கட்சிக்காக பிரசாரம் செய்தால், மக்களிடம் எடுபடுமா? என்ற கேள்வியும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

Related Stories: