சேந்தமங்கலம்: கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் தரைபாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த சில வாரங்களாக பெய்த பலத்த மழையால் ஆங்காங்கே உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, அரப்பளீஸ்வரர் கோயில் அருகிலுள்ள சினி பால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த இரண்டு அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, அருவியின் அருகில் செல்ல தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களுக்கு முன்பு செய்த பலத்த மழையின் போது, அந்த தரைப்பாலம் சேதம் அடைந்து விட்டது.