பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நடிகை கங்கனா திடீர் சந்திப்பு

புதுடெல்லி: பாலிவுட் நடிகை கங்கனா, அவ்வப்போது அரசியல் ரீதியாக கருத்துகள் கூறி சர்ச்சைகளில் சிக்குவார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள அவர், தனது புதிய படமான ‘தேஜாஸ்’ படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் நேற்று ‘தேஜாஸ்’ படக் குழுவினருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். இந்த படத்தில் இந்திய விமானப்படை விமானியாக கங்கனா நடிக்கிறார். இவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தேஜாஸ் படத்தின் ஸ்கிரிப்டை விமானப்படையுடன் பகிர்ந்து கொண்டோம்.

அதற்கான அனுமதி கோரியும் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தேன்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கங்கனா வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘நான் ஒரு சிப்பாய் பாத்திரத்தில் நடிக்க விரும்பினேன். எனக்கு சிறுவயதிலிருந்தே ஆயுதப்படைகள் மீது ஒரு மோகம் இருக்கிறது. வீரர்கள் மீதான என் உணர்வுகளை என்னால் தடுக்க முடியாது. அவர்களது வீரத்தைப் பற்றி நான் வெளிப்படையாகப் பேசுகிறேன். அவர்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கின்றனர். இந்த படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: