புதுடெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடந்த மாநாட்டில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேசியதாவது: இந்திய பெருங்கடல் பகுதியில் ராணுவ வியூக போட்டி நடந்து வருகிறது. இது எதிர்வரும் காலங்களில் மட்டுமே வேகம் பெறும். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஏராளமான நாடுகள் அங்கு அதிக கவனம் செலுத்துகின்றன. தற்போது, இந்திய பெருங்கடல் பகுதிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் பல்வேறு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போது வரையில் இந்த பிராந்தியத்தில் அமைதியாகவே இருக்கிறது.