தமிழகம் மீட்போம் தலைப்பில் 3ம் கட்டமாக நாளை சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் மீட்போம் தலைப்பில் மூன்றாம் கட்ட சிறப்பு பொதுக்கூட்டங்கள் நாளை முதல் காணொளி காட்சி வாயிலாக தொடங்குகிறது. இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், தருமபுரி, சேலம், திருநெல்வேலி / தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலமாக ‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பிலான 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, மூன்றாவது கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டங்கள் குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும். அதன்படி, 2020 டிசம்பர் 12ம் தேதி (சனி) - ராமநாதபுரம், 14ம் தேதி (திங்கள்) - திண்டுக்கல், 17ம் தேதி (வியாழன்) - கடலூர், 19ம் தேதி (சனி) - திருவள்ளூர், 23ம் தேதி (புதன்) - சிவகங்கை, 26ம் தேதி (சனி) - தஞ்சை, 28ம் தேதி (திங்கள்) - நாகை/ திருவாரூர், 29ம் தேதி (செவ்வாய்) - திருவண்ணாமலை, 31ம் தேதி (வியாழன்) - அரியலூர்/ பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: