மணமகளுக்கு கொரோனா குடும்பமே பாதுகாப்பு உடையணிந்து நடந்த திருமணம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் திடீரென மணமகளுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ஒட்டுமொத்த குடும்பமும் பாதுகாப்பு உடை அணிந்து திருமணத்தை திட்டமிட்டபடி நடத்தி வைத்தனர். ராஜஸ்தானின் பரான் மாவட்டத்தை சேர்ந்த ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. கிஷான்கன்ஜ் பகுதியை சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்களுக்கு கொரோனா தொற்றுஇருந்ததால் மணமகள், அவரது பெற்றோர் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில், காலையில், மணப்பெண், அவரது தாய்க்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவை காரணம் காட்டி திருமணத்தை தள்ளிப்போடுவதை விரும்பாமல் இருவீட்டாரும் மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து பேசினார்கள். அதிகாரிகளின் அனுமதியை அடுத்து அரசின் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணமகன், மணமகள் ஆகியோர் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்து இருந்தனர். திருமணத்தில் மணமகளின் தந்தை, அய்யர் ஆகியோர் பாதுகாப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நியமிக்கப்பட்டு இருந்த 3 பேர் குழுவும் பாதுகாப்பு உடை அணிந்து திருமண நிகழ்வுகளை கண்காணித்தனர்.

Related Stories: