பென்னாகரம்: விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஒகேனக்கல் களைகட்டியது. இதையொட்டி, மீன் விற்பனை ஜோராக நடந்தது. புரெவி புயல் எதிரொலியாக, தொடர் மழை பெய்ததால், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு, கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக சரிந்தது. இந்நிலையில், மழை நின்றதால் விடுமுறை தினமான நேற்று, ஒகேனக்கல் மீண்டும் களை கட்டியது. பெங்களூரு, ஆந்திரா, கேரளா மற்றும் தர்மபுரி, சேலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மெயினருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த அவர்கள், தொங்கு பாலம், மீன் காட்சியகம், முதலை பண்ணை மற்றும் கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து, பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.