மதுரை: மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் கடந்த 1970ம் ஆண்டு அரசாணைப்படி, அனைத்து கோயில்களிலும் சித்த மருத்துவமனை பிரிவை ஏற்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வக்கீல் கணபதிசுப்ரமணியன் ஆஜராகி, ‘‘அரசாணைப்படி மக்கள் அதிகம் கூடும் முக்கிய கோயில்களில் சித்த மருத்துவ வசதி இருக்க வேண்டும்,’’ என்றார். அறநிலையத்துறை வக்கீல் நாராயணகுமார் ஆஜராகி, ‘‘தமிழகத்திலுள்ள முக்கியமான 35 கோயில்களில் முதல்கட்டமாக சித்த மருத்துவ பிரிவு துவக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவை பயன்பாட்டுக்கு வந்ததும், படிப்படியாக அனைத்து கோயில்களிலும் சித்த மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும்,’’ என்றார். இதையடுத்து அறநிலையத்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென கூறிய நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.