மத்திய பிரதேசத்தில் வேளாண் பொருட்களை விற்றால் பிற மாநில விவசாயிகளை சிறைக்கு அனுப்புவேன்: மத்திய அரசுக்கு எதிராக பாஜ முதல்வர் எச்சரிக்கை

போபால்: மத்திய பிரதேசத்தில் பிற மாநில விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்றால் அவர்களை சிறைக்கு அனுப்புவேன் என்று, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளும் பாஜக முதல்வர் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் ேமாடி தலைமையிலான மத்திய பாஜக அரசு சமீபத்தில் இயற்றிய புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் காலவரையின்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றார்.

மேலும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டின் எந்த பகுதியிலும் சென்று விற்க முடியும் பிரதமர் மோடி புதிய வேளாண் சட்டத்தின் பயன் குறித்து பேசி வருகிறார். ஆனால், பாஜக ஆளும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சேஹோரில் விவசாயிகளுடனான நடத்திய உரையாடலில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் விவசாயிகளிடம் பேசுகையில், ‘மத்திய பிரதேச மாநிலத்தில் உற்பத்தியாகும் விவசாய பொருட்களை, இங்கேயே விற்க அனுமதிக்க முடிவு செய்துள்ளேன். மற்ற மாநிலங்களைச்  சேர்ந்த விவசாயிகள், மத்திய பிரதேசத்திற்கு வந்து தங்கள் பயிர்களை விற்க முயன்றால், நாங்கள்  அவர்களின் லாரிகளை பறிமுதல் செய்வோம்.

அந்த விவசாயிகளை சிறையில் அடைப்போம்’ என்றார். மத்திய அரசும், பிரதமர் மோடியும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டின் எந்த பகுதியிலும் விற்க அனுமதிக்கும் புதிய சட்டத்தை நிறைவேற்றியதாக பேசி வரும் நிலையில், பிற மாநில விவசாயிகள் தங்கள்  விளைபொருட்களை மத்திய பிரதேசத்தில் விற்றால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரித்து பேசியது, விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்திைய ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: