பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் கடலில் குளித்த 2 சிறுவர்கள் பலி

தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் ஜான்ராவர் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜின் மகன் தருண் (11), தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த சகாரியாவின் மகன் ஜோசப் (10) ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். இவர்களின் தோழி பூஜாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அதை கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி, பூஜா, தருண், ஜோசப், தோழிகள் மோனிகா, இந்திராணி என 5 பேர், நேற்று காலடிப்பேட்டை அருகே உள்ள ஏழு குடிசை கடல் பகுதியில், பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அப்போது, தருண் மற்றும் ஜோசப் இருவரும் கடலில் குளித்த போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி இருவரும் மாயமாகினர். இதை பார்த்த தோழிகள் கூச்சலிடவே, மீனவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், மீனவர்களுடன் படகில் சென்று, மாயமான சிறுவர்களை தேடினர். அதில், ஜோசப் மட்டும் சடலமாக மீட்கப்பட்டான். தருண் சடலத்தை தொடர்ந்து தேடி வருகின்றனர். 

Related Stories: