கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதனையடுத்து கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள வளாகத்தில் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நிரந்தர மாவட்ட பெருந்திட்ட வளாகம் அமைப்பதற்கு சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 14.9 ஹெக்டேர் நிலத்தை வருவாய்த்துறையினருக்கு ரூ.1.98 கோடி மதிப்பில் விற்பனை செய்ய இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் கோயில் நிலத்தை கிரையம் செய்வதற்கு முன்னரே கட்டிடம் கட்டுவதற்கு கடந்த மாதம் 23ம் தேதி காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்ட கடந்த 27ம் தேதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில் தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.