திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நெல்லுக்கு மாற்றாக குறைந்த செலவில் அதிக விளைச்சல் தரக்கூடிய வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிடத்துவங்கியுள்ளனர்.
மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் 50க்கும் மேற்பட்ட கண்மாய்கள் அமைந்துள்ளன. கண்மாய்களில் நீர் இருந்தால்தான் நெல் விவசாயம் செய்ய இயலும். தற்போதைய மழையில் பெரிய அளவில் திருமங்கலம் ஒன்றியத்தில் கண்மாய்கள் நிரம்பவில்லை. இதனால் நெல்சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். நெல் பயிரிட அதிகளவில் தண்ணீர் தேவைப்படுவதால் விவசாயிகள் மாற்று யோசனையாக குதிரைவாலி, வரகு உள்ளிட்டவைகளை பயிரிடத் துவங்கியுள்ளன. குறைந்த செலவில் அதிகளவில் விளைச்சல் தரக்கூடிய இந்த சிறுதானியங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். சிறுதானியங்களை பயிரிட மானாவாரி மற்றும் புன்செய், நன்செய் நிலங்களே போதுமானதாக உள்ளது. மேலும் மூன்று நான்கு முறை மழை பெய்தாலே போதுமானதாகும்.