உத்தமபாளையம் அருகே ஆற்றங்கரையில் விளையாடிய இரண்டு வயது குழந்தை மாயம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே, பெரியாற்றங்கரையில் விளையாடிய குழந்தை மாயமானதை தொடர்ந்து, அவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டானா என தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் உள்ள வடக்கு ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர். மனைவி பிரியா. இவர்களது மகன்கள் யோகித் (4), நிக்லேஷ் (2). கொரோனா விடுமுறை காலம் என்பதால், அதே ஊரில் உள்ள தாத்தா சின்னச்சாமி வீட்டுக்குச் சென்றிருந்தனர். நேற்று சின்னச்சாமி தனது மனைவி மற்றும் பேரன்கள் இருவரையும் ராயப்பன்பட்டி - அணைப்பட்டி இடையே, பெரியாற்றங்கரையில் உள்ள தங்களது தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

தோட்டத்தில் சின்னச்சாமியும், அவரது மனைவியும் களை எடுக்க, சிறுவர்கள் இருவரும் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது குழந்தை நிக்லேஷ் ஆற்றில் விழுந்ததாகவும், அதை பார்த்த யோகித் சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. யோகித்தின் சத்தம் கேட்டு சின்னச்சாமியும், அவரது மனைவியும் அக்கம்பக்கத்திலும் ஆற்றிலும் தேடியுள்ளனர். ஆனால், காணவில்லை. ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. தகவலறிந்து வந்த ராயப்பன்பட்டி பொதுமக்கள், கம்பம் தீயணைப்புத்துறையினர் மாயமான குழந்தை நிக்லேஷை, ஆற்றில் தேடி வருகின்றனர்.

Related Stories: