விடுபட்ட இடத்தில் இருந்து 28 முதல் மீண்டும் பிரச்சாரம்: உதயநிதி அறிவிப்பு

தஞ்சை: தஞ்சையில் தனியார் ஓட்டலில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: நான் திமுக இளைஞரணி செயலாளர் ஆக வேண்டும் என்று தஞ்சை திமுக இளைஞரணி தான் முதன் முதலில் தீர்மானம் போட்டு அனுப்பியது. தொகுதிக்கு 40,000 இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை மிஞ்சி செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். அதிமுக அரசின் ஊழல், கொள்ளை பற்றியும், திமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும் மக்களிடம் விளக்கினேன். நான் 3 நாளாக கைது செய்யப்பட்டு வருகிறேன். எமர்ஜென்சியையே பார்த்தவர்கள் நாங்கள்.

அடிமை அதிமுக அரசு ஆயுதம் தாங்கிய போலீசையும், ஆயுதப்படையையும் நிறுத்தி பயமுறுத்தி பார்த்தது. யாருக்கும் அஞ்சமாட்டோம். தொடர்ந்து பிரசாரம் செய்வேன். புயல் காரணமாக தற்காலிகமாக பிரசாரம் ஒத்தி வைக்கப்படுகிறது. வரும் 28ம் தேதி முதல் விடுபட்ட இடத்தில் இருந்து பிரசாரத்தை துவக்குவேன். புயல் பாதிப்பு எப்படி உள்ளது என்பதை பொறுத்து பிரசாரம் மேற்கொள்ளப்படும். எம்பி தேர்தலில் பெற்றது போல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இளைஞர்கள் கடமை உணர்வோடு செயல்பட்டு வெற்றியை பெற்று தருவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு உதயநிதி பேசினார்.

Related Stories: