மதுரை: மதுரையைச் சேர்ந்த தவமணிதேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) தனிக் கணக்கெடுப்பையும் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை நவ.25க்கு தள்ளி வைக்கிறோம். அப்போது, மத்திய உள்துறை செயலர், சமூக நீதி அமைச்சக செயலர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவர் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நேரிடும் என எச்சரித்தனர்.