மெரினா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு செய்யப்படும் : தமிழக அரசு தகவல்

சென்னை, :மெரினா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான  கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி,  மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் இருமுறை திறக்கப்படவில்லை. நவம்பர் 9ம் தேதி இந்த டெண்டர்கள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்காக 3  கம்பெனிகள் டெண்டர் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது, நீதிபதிகள், கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட மெரினா கடற்கரை பொதுமக்களுக்காக எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு ஆலோசித்து முடிவு செய்யும் என்றார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, மெரினா கடற்கரையை திறப்பது குறித்து சென்னை மாநகராட்சி அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. மெரினா கடற்கரையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்திற்குள் அரசு முடிவெடுக்கவுள்ளது என்று தெரிவித்தார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், மெரினா கடற்கரையை திறப்பது குறித்து அரசு வரும் 30ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் முடிவெடுக்க நேரிடும் என்று கெடு விதித்தனர்.

Related Stories: