சென்னை: வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் திமுக நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஜனவரி மாதம் 1ம்தேதி தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளது. 16.11.2020 முதல் 15.01.2020 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் பெயர்கள் நீக்கவும் திருத்தம் செய்யவும் மனுச் செய்ய காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.இதுதவிர வருகின்ற 21, 22ம் தேதி மற்றும் டிசம்பர் 12, 13ம் தேதி ஆகிய 4 நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும் இடம் மாறிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து அந்த படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.