திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான கந்தசுவாமி திருக்கோயில் திருப்போரூரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழாவும், மாசி மாதத்தில் பதிமூன்று நாட்கள் பிரம்மோற்சவமும் நடைபெறும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் கொடியேற்றத்தின்போது அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் ஓத கோயில் அர்ச்சகர்கள் கொடி மரத்தில் கொடியை ஏற்றினர்.