காஞ்சி தெற்கு மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் திமுகவில் புதிதாக 30 ஆயிரம் உறுப்பினர்கள்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் திமுகவில் புதிதாக 30 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தெரிவித்தார். காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் காஞ்சிபுரம் கலைஞர் பவளவிழா மாளிகையில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய உறுப்பினர்களாக கல்லூரி மாணவ, மாணவிகள், பட்டதாரிகள் என ஏராளமானோர் ஆர்வமுடன், தங்களை திமுகவில் உறுப்பினராக இணைத்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

பின்னர் க.சுந்தர் எம்எல்ஏ, செய்தியாளர்களிடம் கூறுகையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் புதிய உறுப்பினர்களாக திமுகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் நடக்கும் அடிமை அதிமுக அரசுக்கு எதிராக, பலரும் திமுகவில் இணைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 40 நாட்களில் 20 லட்சம் புதிய உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில் காஞ்சி தெற்கு மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இதன்மூலம் புதிய உத்வேகமும், தன்னம்பிக்கையும் பிறந்துள்ளது.

முதன்முறை வாக்காளர்கள், இளைய தலைமுறையினர் புதிய உறுப்பினர்களாக இணைந்திருப்பதன் மூலம் கட்சியின் அடித்தளம் மேலும் வலுவடைந்து வருகிறது. இதன்மூலம் அதிமுக அரசுமீது புதிய வாக்காளர்கள், இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது என்பது தெளிவாகிறது. விரைவில் அடிமை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர்வது உறுதி என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேகரன், மாவட்ட துணை செயலாளர் தசரதன், மலர்மன்னன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், சேகர், நீலகண்டன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மாணவர் அணி அமைப்பாளர் அபுசாலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: