சென்னை : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக மத்திய அரசு அறிவித்ததற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் தமிழக அரசின் வசம் இருந்து மத்திய அரசிடம் செல்லும். அப்படி இருக்கும் நிலையில் கல்வி கட்டணமும் உயரும். இதனால் அண்ணா பல்கலைக்கழகம் என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாகனியாக மாறிவிடும். இதனால் தமிழக அரசு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்று அறிவித்தது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னிசையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து விரைவில் தருமாறும், இதற்கு மாநில அரசின் நிதியுதவி வேண்டாம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. .