காரில் வைத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் காசியிடம் சிக்கிய டாக்டர்கள், சென்னை பேராசிரியை விவரம்: புகார் வேண்டாம்; திருமணமான பெண்கள் கதறல்; சிபிசிஐடி போலீசார் விசாரணையில் திடுக்

நாகர்கோவில்: சமூக வலை தளங்களில் இளம்பெண்களுடன் பழகி அவர்களை காதலிப்பது போல் நடித்து பலாத்காரம் செய்ததுடன், ஆபாச வீடியோக்கள் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதாகி உள்ள, நாகர்கோவிலைசேர்ந்த காசி (27) மீது ஏற்கனவே 6 புகார்கள் பதிவாகியுள்ளது. இந்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் காசி மீது பலாத்கார வழக்கு பதிந்து, அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட வீடியோக்கள், போட்டோக்களை சைபர் க்ரைம் சிறப்பு குழு மீட்டது.அதில் போலீசார் மலைத்து போகும் அளவுக்கு 1000த்துக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்தன.

அதில் உள்ளவர்களின் அடையாளங்களை கண்டுபிடிப்பது தொடர்பாக காசியிடம் விசாரணை நடந்தது. விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளது. காசியின் செல்போன் சிம்கார்டு, போன் மெமரி, கூகுள் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் 17 ஆயிரம் எண்கள் இருந்துள்ளன. இதில் பல எண்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், காசியின் தொடர்பில் இருந்த செல்போன் எண்களில் போலீசார் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காசியிடம் பெங்களூர், மும்பை, நெல்லை, கடலூர், சென்னை மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பல பெண்கள் சிக்கியுள்ளனர். இதில் சென்னை, மும்பை, குமரி மாவட்டத்தை சேர்ந்த பல பெண் டாக்டர்கள், மருத்துவ மாணவிகளும் அடங்குவர்.

மேலும் சென்னையை சேர்ந்த ஒரு பேராசிரியையும் இவரிடம் சிக்கியுள்ளார்.பெரும்பாலான ஆபாச படங்கள் காசியும், பாதிக்கப்பட்ட பெண்களும் சேர்ந்து இருப்பதுபோல் இல்லாமல், காசியின் வற்புறுத்தலுக்கு இணங்க, அவர்கள் தங்களது உடல் அழகை வீடியோவாக எடுத்து, காசிக்கு அனுப்பியுள்ளனர். இதனை அவன் பதிவிறக்கம் செய்து, அந்த வீடியோவை வைத்து அந்த பெண்களை சீரழித்து, பணம் பறித்துள்ளான். பெண்களை பலாத்காரம் செய்யும் வீடியோக்கள் எல்லாம் பெரும்பாலும் காரில் வைத்தே காசி எடுத்துள்ளான். அவனது தொடர்பில் இருந்த பெண்களிடம் பேசி போலீசார் புகார் கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதில் பெரும்பாலான பெண்கள், திருமணம் ஆகிவிட்டதால் புகார் வேண்டாம் என கதறி அழுதுள்ளனர்.

Related Stories: