இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்: இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த நடராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து.!!!

சென்னை: ஆஸ்திரேலிய அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் இடம் பிடித்தற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய நடராஜன் அபாரமாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக, அவரது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சு வியந்து பாராட்டப்படுகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியுடன் வலைப்பயிற்சியில் உதவும் பவுலராக நடராஜன் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், டி20 அணியில் இடம் பெற்றிருந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் நடராஜன் இடம் பிடித்தற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடராஜனுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் நடராஜன். தன்னுடைய திறமைக்கான பந்துவீச்சால் சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் அவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய லட்சியம் நிறைவேறவும், இந்திய அணிக்காக பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories: