ஊராட்சி ஒன்றிய பணிகள் குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டவருக்கு ‘அறிவு இருக்கிறதா’ என பதில்: சமூக வலைதளத்தில் வைரல்

கடையநல்லூர்: கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியவருக்கு ‘இணையதள அறிவு’ இருந்தால் வெப்சைட்டில் பதிலை தெரிந்து கொள்ளுங்கள் என்று பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொய்கை  ஊராட்சி கள்ளம்புளியை சேர்ந்த சந்திரன் (46) தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், 2013 முதல் 2020 வரை சரி செய்யப்பட்ட கை பம்புகளின் எண்ணிக்கை மற்றும் செலவு, எம்பி, எம்எல்ஏ, கலெக்டர் நிதி எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட 18 கேள்விகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திடம்  கேட்டுள்ளார்.  இதற்கு கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட பதிலில் கேள்வி எண் 1 முதல் 17 வரை உள்ள கேள்விகளுக்கு www.accounting online.gov.in என்ற இணையதள முகவரியில்  பதில் உள்ளது.

சரிபார்த்துக் கொள்ளவும், தங்களுக்கு ‘இணையதள அறிவு’ இல்லையெனில் ‘இணையதள அறிவு’ உள்ள ஒருவரை அழைத்துச் சென்று பார்க்கவும் என்று தெரிவித்துள்ளனர். இதனடியில் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என்று ஒப்பிடப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவருக்கு முறையான பதில் அளிக்காமல் இணையதள அறிவு தொடர்பாக கேள்வி எழுப்பி கிண்டலாக பதில் அளித்து இருப்பது சமூக ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: