குறு, சிறு தொழில்களுக்கு புது விதிகள் திவால் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு: குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க திட்டம்

புதுடெல்லி: திவால் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை வரும் குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, திவால் நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதில் பெரு நிறுவனங்களுக்கு சிறப்பு திட்டங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு விதிகளை உருவாக்கவும், திவால் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள வழக்குகளை ஏற்பதில் தாமதத்தை களையும்வகையிலும் திருத்தங்கள் இடம்பெறும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போதைய தேவை கருதியே சில திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இது குறித்த பரிந்துரைகளை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதன் அடிப்படையில்தான் சட்ட விதிகள் திருத்தப்பட உள்ளன. இந்த குழு, தொழில்துறையினர், சங்கங்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றுள்ளது. இதுபோல், திவால் நடவடிக்கை வாரியம் சார்பிலும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல், பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகர் ஏற்படுத்திய பல்வேறு துணை குழுக்களும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் திவால் நடைமுறையை விரைவாகவும் சிக்கலின்றியும் நடைமுறைப்படுத்துவற்கான தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்து வருகின்றன.

ஆனால்,இந்த திட்டங்கள் குறித்த இறுதி முடிவை திவால் வாரியம்தான் எடுக்கும். அமெரிக்கா, இங்கிலாந்தில் உள்ள நடைமுறைகளை போன்ற இந்த திவால் நடவடிக்கைக்கான திருத்தங்கள் இருக்கும். இதன்படி, நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனங்களும் கடன் வழங்கிய அமைப்புகளும் திவால் நடவடிக்கைக்கு முன்பே ஒப்பந்தம் செய்ய வேண்டி வரும். அதேநேரத்தில், திவால் நிலையில் உள்ள நிறுவன உரிமையாளர், திவால் நடைமுறைகள் முடியும் வரை அந்த நிறுவனத்தின் உரிமையை தக்க வைத்துக்கொள்ளலாம். இருப்பினும் கடன் வழங்கிய நிறுவனத்தின் குழு முடிவே இறுதியானதாக இருக்கும் என்றார். கடைசியாக திவால் சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் திருத்தம் செய்யப்பட்டது. இதில் 7 மற்றும் 9வது பிரிவுகள் நீக்கப்பட்டன.

Related Stories: