சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகம் சுஜ்ஜல்குட்டை வனப்பகுதியில் நேற்று காலை பவானிசாகர் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றபோது, குண்டுக்கல் பள்ளம் என்ற இடத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். இது குறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட வன அலுவலர் அருண்லால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நிஹார்ரஞ்சன் அறிவுரையின் பேரில், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். பவானிசாகர் வனச்சரக அலுவலர் மனோஜ்குமார் முன்னிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வன கால்நடை மருத்துவர் அசோகன் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.