மதுரை: கொரோனா பரவல் காரணமாக திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடு பெருமைக்குரியது மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில். ஆண்டுதோறும் இங்கு கந்த சஷ்டி திருவிழா, சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் பக்தர்கள் கூட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கந்தசஷ்டி திருவிழாக்கள் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் கோயிலுக்கு உள்ளேயே உள் திருவிழாவாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.