கொரோனா பரவலால் திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி, சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

மதுரை: கொரோனா பரவல் காரணமாக திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் முதல் படை வீடு பெருமைக்குரியது மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில். ஆண்டுதோறும் இங்கு கந்த சஷ்டி திருவிழா, சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் பக்தர்கள் கூட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கந்தசஷ்டி திருவிழாக்கள் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் கோயிலுக்கு உள்ளேயே உள் திருவிழாவாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் நவ.15ம் தேதி பக்தர்கள் தவிர்த்து சுவாமிக்கு மட்டும் காப்பு கட்டும் நிகழ்வு, அதனைத் தொடர்ந்து வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வேல் வாங்குதல் மற்றும் சூரசம்ஹாரம் போன்ற நிகழ்வுகள் கோயிலுக்குள் உள்திருவிழாவாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே காப்பு கட்டிக்கொண்டு வழிபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: