மதுரை: தேசிய அளவில் சிறந்து விளங்கும் மாநகராட்சிகளில், மதுரை மாநகராட்சிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. இதற்காக புதுடெல்லியில் நடைபெறும் விழாவில், மாநகராட்சி கமிஷனர் விசாகன் விருதை பெறுகிறார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் 33 ஊரணிகள் உள்ளன. அதில் தனியார் பங்களிப்புடன் 11 ஊரணிகள் தூர்வாரி புனரமைக்கப்பட்டது. தவிர, 16 ஊரணிகளில் தூர்வாரி, புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மீதமுள்ள 6 ஊரணிகள் தூர்வாரப்பட உள்ளன. மேலும் மாரியம்மன் தெப்பக்குளத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், தல்லாகுளம் திருமுக்குளம், டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ள தெப்பக்குளம் ஆகியவற்றில் மழைநீரை தேக்க வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநகராட்சி பகுதிகளில் 100 வார்டுகளிலும் பயன்படாமல் உள்ள 402 ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டு, அந்த ஆழ்துளை (போர்வெல்) கிணறுகள் மழைநீர் கட்டமைப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.