மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கார்த்திகேய சேனாபதி திமுகவில் இணைந்தார்

சென்னை: காங்கேயம் கால்நடை வளர்ப்போர் சங்கச் செயலாளர் கார்த்திகேய சேனாபதி நேற்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திருப்பூர் கிழக்கு மாவட்டம், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும்-காங்கேயம் கால்நடை வளர்ப்போர் சங்கச் செயலாளருமான கார்த்திகேய சேனாபதி நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி எம்.எல்.ஏ., ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,  திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல, புதுக்கோட்டை  வடக்கு மாவட்டம்,  அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஏ.இளங்கோ தலைமையில் ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் சி.சின்னப்பா, கறம்பகுடி எம்ஜிஆர் மன்றத் தலைவர் ஆறுமுகம், கறம்பகுடி ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், செய்தி தொடர்புச் செயலாளர் பி.டி.அரசகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ தஞ்சை எஸ்.நடராஜனின் பேரனும்-கல்லீரல் தீவிர சிகிச்சை நிபுணர் மற்றும் கல்லீரல் மாற்று மயக்க மருந்து நிபுணருமான டாக்டர் எம்.கார்த்திக்ராஜ் திமுகவில் இணைந்தார். அப்போது தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., உடனிருந்தார்.

Related Stories: