பதற்றத்துக்கு மத்தியில் இந்த மாதம் 4 நிகழ்வில் மோடி - ஜின்பிங் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மே முதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையில் உள்ள பதற்றத்தை தணிக்க பல நிலைகளில் பேச்சுவார்த்தை  நடந்துள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த மாதத்தில் (நவம்பர்) பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நான்கு முறை வெவ்வேறு கூட்டங்களில் சந்திக்கின்றனர். வெளியுறவு  வட்டார தகவல்களின்படி, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் வெவ்வேறு உச்சிமாநாடுகளில் மூன்று முறை காணொலி காட்சி மூலம் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

வரும் 10ம் தேதி நடைபெறும்  ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்கின்றனர். 11ம் தேதி நடைபெறும் கிழக்கு ஆசிய மாநாட்டிலும், 17ம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் சந்திக்கின்றனர்.  இதுதவிர, இரு தலைவர்களும் 21 மற்றும் 22ம் தேதிகளில் சவூதி அரேபியாவில் நடக்கும் ஜி -20 நாடுகளுடனான சந்திப்பில் சந்திக்கின்றனர். லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீடிக்கும் நிலையில் முதல்முறையாக  இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர்.

Related Stories: