அவனியாபுரம்: அவனியாபுரம் அருகே, மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் நாதஸ்வர கலைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் அருகே உள்ள செம்பூரணியை சேர்ந்தவர் மூக்கையா(55). நாதஸ்வர கலைஞர். திருமணமாகாத இவர், இப்பகுதியில் உள்ள செம்மண் குடிசையில் தனியாக வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு இப்பகுதியில் பெய்த பலத்த மழைக்கு, மூக்கையாவின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால், மூக்கையா இறந்தது குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தெரியவில்லை.