அவனியாபுரம் அருகே மழைக்கு வீடு இடிந்து நாதஸ்வர கலைஞர் பலி: 2 நாட்களுக்கு பின் உடல் மீட்பு

அவனியாபுரம்: அவனியாபுரம் அருகே, மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் நாதஸ்வர கலைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் அருகே உள்ள செம்பூரணியை சேர்ந்தவர் மூக்கையா(55). நாதஸ்வர கலைஞர். திருமணமாகாத இவர், இப்பகுதியில் உள்ள செம்மண் குடிசையில் தனியாக வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு இப்பகுதியில் பெய்த பலத்த மழைக்கு, மூக்கையாவின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால், மூக்கையா இறந்தது குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தெரியவில்லை.

இந்நிலையில் இன்று காலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இடிபாடுகளில் சிக்கி உடல் அழுகிய நிலையில் மூக்கையா இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூக்கையாவின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய முதியவரின் உடல் 2 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.      

Related Stories: