சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவெய்திய அதிர்ச்சிச் செய்தி கேட்டு பெருந் துயருற்றேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவில் மூன்று முறை பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று 2016ம் ஆண்டு வேளாண்துறை அமைச்சராக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் அமைச்சரவையில் பதவியேற்றவர் துரைக்கண்ணு. சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதும் துறை சார்ந்த மானியங்களில் பதிலுரையாற்றுகின்ற போதும், அவை மரபுகளுக்கு உட்பட்டுச் செயல்படும் அமைச்சராவார். அவரது மறைவு அதிமுகவிற்கும் சக அமைச்சரவை சகாக்களுக்கும் பேரிழப்பாகும்.