வானூர்: நெல்லிக்குப்பம், வானூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூரில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 43 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலம் ஆவணம், மனை உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது சார் பதிவாளராக (பொறுப்பு) வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் திடீரென சார் பதிவாளர் அலுவலத்தில் நுழைந்து ரெய்டு நடத்தினர். அப்போது அலுவலகத்தில் கதவை மூடியதால் அங்கு பத்திரம் பதிவு செய்ய வந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்தின் உள்ளே மாட்டிக்கொண்டனர். பின்னர் சார் பதிவாளரிடம் விசாரணை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சம் சிக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.