7.5% இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து போராடுவோம் அதிமுகவிற்கு அதிகாரம் முக்கியமல்ல தமிழகத்தின் நலன் மட்டுமே முக்கியம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்ட நவீன மீன் விற்பனை அங்காடிகள் ஒதுக்கீடு ஆணை மற்றும் 15 விசைப்படகு மீனவர்களுக்கு சாட்டிலைட் தொலைப்பேசி ஆகியவற்றை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்குறியது. இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

7.5% இட ஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்தது அதிமுக அரசு தான்.  ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறது. அதிமுகவிற்கு அதிகாரம் முக்கியம் அல்ல. தமிழகத்தின் நலன் மட்டுமே முக்கியம். எனவே, அதிமுக தொடர்ந்து போராடும். இறுதியில் வெற்றி பெறும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக குஷ்பு கைது செய்யப்பட்டார். திருமாவளவனுக்கு பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. 2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக குறித்து வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: