காங்கயம்: காங்கயம் பகுதியில் உள்ள காடுகளில் வெள்ள வேலமரத்தின் பட்டைகளை இரவு நேரத்தில் மர்ம கும்பல், சாராயம் காய்ச்ச உறித்து செல்வதால் மரங்கள் மடியும் அபாயத்தில் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம், நத்தக்காடையூர்,வெள்ளக்கோவில், ஊதியூர், உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்களிலும், மாநில மற்றும் கிராம சாலை ஓரங்களிலும் அதிக அளவில் வெள்ள வேலமரங்கள் வளர்ந்து உள்ளன. விளைச்சல் நிலங்களில் உள்ள மரங்கள் ஆடுகளுக்கு நிழலாக இருக்க விவசாயிகள் வளர்க்கின்றனர். காங்கயம், ஊதியூர் மற்றும் பொத்திபாளையம் கிராமங்களில் கடந்த சில மாதங்களாக விவசாய தோட்டங்களில் உள்ள வளர்ந்த வெள்ள வேலமரத்தின் பட்டைகளை சாராயம் காய்ச்ச தொடர்ச்சியாக மர்ம கும்பல் ஒன்று இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்து உறித்து செல்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.