சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் அம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியை யானை துரத்தி தாக்க முயன்றதால், பரபரப்பு நிலவியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்வதால், திம்பம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழகம்- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து சேவை இல்லாத நிலையில், இரு மாநில எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் கரும்பு தின்று பழகிய ஒற்றை யானை அப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், நேற்று காலை பண்ணாரி சோதனைசாவடி அருகே சாலையோரம் ஒற்றை யானை தீவனம் தின்றுகொண்டிருந்தது.