ஆத்தூர்: ஆத்தூரில், புதியதாக திறக்கப்பட்ட ஜவுளி கடையில், சிறப்பு சலுகையாக 23க்கு சேலை, சட்டை விற்பனை செய்யப்பட்டது. இதை வாங்குவதற்காக சமூக இடைவெளி இன்றி பெரும் கூட்டம் கூடியதால், நகராட்சி அலுவலர்கள் கடைக்கு சீல் வைத்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டையில் நகராட்சி அலுவலகத்தின் எதிர் புறம் கடந்த 3 ஆண்டுகளாக துணிக்கடையை வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர். இந்த கடையை ஒட்டி இருந்த மற்றொரு கடையில், அவர்களே நேற்று புதிய கிளையை தொடங்கியுள்ளனர். புதிய கிளையின் துவக்க விழாவை முன்னிட்டு, நேற்று 23ம் தேதியை கருத்தில் கொண்டு ₹23க்கு பெண்களுக்கு சேலை ஒன்றும், ஆண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ரெடிமேட் சர்ட் ஒன்றும், சலுகை விலையில் வழங்கப்படும் என தெரிவித்தனர்.