ஊத்துக்கோட்டை: பனையஞ்சேரி ஊராட்சியில் கட்டி முடித்து திறக்கப்படாத சேவை மைய கட்டிடம் தற்போது குடிகாரர்களின் பார் ஆக மாறிவிட்டது. எனவே, அக்கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், பனையஞ்சேரி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் சேர்ந்தவர்கள், தங்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு சான்றுகள், திருமண நிதி உதவி, முதல் தலைமுறை பட்டதாரி சான்று உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, ஊத்துக்கோட்டையில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு சென்று வருவதால் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, இக்கிராமத்திலேயே சேவை மைய கட்டிடம் கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.