பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிளைச் சிறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி தாலுகா வளாகத்தில் சார் கருவூலம், கோர்ட், கிளைச்சிறை, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள கிளைச்சிறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக சுமார் 15 ஆண்டுக்கு முன்பு சிறிய நீரோடை அமைக்கப்பட்டது. அதன் வழியாக வெளியேறிய கழிவு நீரானது பாலக்காடு ரோட்டில் உள்ள பிரதான ஓடையில் சென்று கலந்தது. அனால், நாள்போக்கில் சாக்கடையை பராமரிப்பில்லாமல் போனதால் கழிவு நீரோடை மாயமானது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அமைக்கும்போது, கிளைச் சிறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கான முறையான சாக்கடை வசதி ஏற்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.