வங்கி அதிகாரிகள் தேர்வை ரத்து செய்ய கோரி விசிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்காக எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் 10 சதவீதத்தைக் பறித்துள்ளது மத்திய பாஜக அரசு வங்கித்துறையில் நடந்திருக்கும் இந்த மோசடியை வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று (16ம் தேதி) காலை 11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாப்பதற்கான இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி பிற ஜனநாயக சக்திகளும் ஆங்காங்கே பங்கேற்கவேண்டும்.

பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி இன்னும் எந்தெந்த துறைகளில் இப்படி இட ஒதுக்கீடு அரவமில்லாமல் பறிக்கப்பட்டதோ தெரியவில்லை. இந்நிலையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் சட்டபூர்வமாக பாதுகாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு உரிமையை வெளிப்படையாக அறிவித்துப் பறிக்கத் துணிந்திருக்கும் மோடிஅரசைக் கண்டித்துப் போராட வேண்டியது சமூகநீதிக் கொள்கையில் அக்கறை கொண்ட அனைவருக்குமான கடமையாகும். எனவே, கொஞ்சமும் தாமதிக்காமல் இந்த அநீதியை எதிர்த்து அனைத்து சனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: