நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அருகே, 2 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், பிளஸ்1 மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அணைப்பாளையத்தை சேர்ந்த கணவனை இழந்த பெண், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டில் தனது 12 மற்றும் 13 வயதான இரு மகள்களுடன் வசித்து வருகிறார். சிறுமிகளின் தாய் வேலைக்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி, வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளை மிரட்டி, அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள், இளைஞர்கள் என 12க்கும் மேற்பட்டோர், கடந்த 6 மாதமாக கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன், முதியவர் முத்துசாமி பாலியல்ரீதியாக துன்புறுத்திய போது, சிறுமிகள் சத்தம்போட்டதால், இந்த கொடுமை வெளியே தெரியவந்தது. இதையடுத்து, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் அப்பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் உட்பட 7 பேரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். தலைமறைவாக இருந்த பெரியசாமி(56) என்பவரை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இந்நிலையில், நேற்று மதியம், அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ்1 படித்து வரும் 16 வயது சிறுவர்கள் 2 பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.