கும்பகோணம்: ஊக்கத்தொகை விலையை உயர்த்தி கேட்டு கும்பகோணம் காவிரி ஆற்றில் நெல்லை கொட்டி விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.காரீப் சந்தை பருவத்துக்கான ஆதார மற்றும் ஊக்கத்தொகை அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் மறு பரிசீலனை செய்து அறிவிக்ககோரி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காவிரி ஆற்றில் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையிலும், மாவட்ட செயலாளர் சுந்தரவிமல்நாதன் முன்னிலையிலும் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து கும்பகோணம் ஆர்டிஓ விஜயனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.இதுகுறித்து சுந்தரவிமல்நாதன் கூறியதாவது: நடப்பாண்டு காரீப் சந்தை பருவத்துக்கான நெல் கொள்முதல் விலையில் மத்திய அரசு கிலோ ஒன்றுக்கு 53 பைசா, தமிழக அரசு 50 பைசா உயர்த்தி ஊக்கத்தொகையாக அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது.