ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு : 2 வாரத்தில் இறுதி விசாரணை; உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி,:ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கை 2வாரத்தில் இறுதி விசாரணை மேற்கொள்வதாக உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஆனால் இந்த ஆணையத்தின் விசாரணை மாறுபட்ட கோணத்தில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டத்தோடு, இதுகுறித்த இடைக்கால மனுவுக்கு பதிலளிக்கவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.இதையடுத்த தாக்கல் செய்த பதில் மனுவில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கை இரண்டு வாரத்தில் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு 2வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: